ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயார்பஸ் விவகாரம் – கபில சந்திரசேனவுக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதவான் தடை விதித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை
இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான கபில சந்திரசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி
சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்னவினால் இந்த பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அந்தப் பிணைக் கோரிக்கைக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான அதிகாரிகள் அன்றைய தினம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவை இன்று (05) முற்பகல் அறிவித்தார்.





