ஈரானிடம் எண்ணெய் கொள்முதல் செய்த சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!
ஈரானிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த ஐந்து சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீன வர்த்தக அமைச்சு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்காவின் மேற்படி தடைகளை முடக்குவதற்கான தடை உத்தரவு ஒன்றையும் சீனா பிறப்பித்துள்ளது.
சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் இந்த அத்துமீறிய தலையீட்டைத் தடுப்பதே சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் எனக் கூறப்படுகின்றது.
பெய்ஜிங்கின் இந்த உத்தரவு எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து இன்னும் முறையான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மோதல் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ராஜதந்திர மோதல் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகின்றது.





