ஐ.ம.ச வும் ஐ.தே.க வும் ஒன்றிணைந்தன – உறுதிப்படுத்திய சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியும்ஐக்கிய தேசியக் கட்சியும் தற்போது ஒன்றிணைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் இன்று (01) நடைபெற்ற மே தினப் பேரணியில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளமைக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளவாறு இரு கட்சிகளும் இணைந்து பயணிப்பதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஏனெனில் இரு கட்சிகளும் ஏற்கனவே ஒன்றிணைந்துவிட்டன என்றும் தெரிவித்தார்.
அத்தகைய குழுக்களில் உள்ள சில நபர்கள் இந்த இணைப்பைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், இனி அத்தகைய சதித் திட்டங்களுக்குத் தான் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இன்று இந்த கொடிய ஜே.வி.பி அரசாங்கம் அனைத்து நிறுவனங்களையும் அழித்து, கல்வியைச் சீரழித்துள்ளது. துறைமுகப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, தரமற்ற நிலக்கரியைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு இன்றுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை. நாட்டின் 25 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. திருடர்களைப் பிடிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று புதிய திருடர்களை உருவாக்கி வருகிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தி இல்லையென்றால், இன்றும் பாடசாலை மாணவர்கள் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள், துறைமுகத்தில் கொள்கலன்கள் கடத்தப்பட்டிருக்கும், திறைசேரி பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும்.
நாட்டை அழிக்கும் ஒரு ‘கொள்ளை வளையம்’ இருப்பதாக ஜனாதிபதி கூறுகிறார், ஆனால் எல்லாவற்றையும் விடப் பயங்கரமானது பெலவத்தையில் உள்ள ‘பொய் வளையம்’ ஆகும். இந்தப் பொய் வளையமே புதிய திருடர்களை உருவாக்குகிறது. இந்த மே தினத்தில் மக்கள் புதிய நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கிறார்கள். பொய்களைச் சொல்லும் இந்த அரசாங்கத்திற்குப் பதிலாக, நாட்டை அபிவிருத்தி செய்யும் ஒரு முறையான ஆட்சியை நாம் உருவாக்குவோம்” என்றார்.





