மூட நம்பிக்கையின் உச்சம்: சிறுவன் பலி! நடந்தது என்ன?
பாம்பு தீண்டலுக்கு இலக்கான சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது, மந்திரவாதியிடம் பெற்றோர் அழைத்துச் சென்றதால் அச்சிறுவன் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
இந்தியா, உத்தர பிரதேசத்திலேயே இப்பெருந்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு தீண்டியுள்ளது.
அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது, பெற்றோர் மந்திரவாதியை நாடியுள்ளனர்.
குறித்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால், அவனைப் புனித கங்கை நதி நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்து வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கங்கையில் மூழ்கினால் பாம்பு விஷம் தானாகவே வெளியேறிவிடும் என்று மந்திரவாதியின் மூடநம்பிக்கை பேச்சை நம்பிய பெற்றோர் அவர்களது மகனை கங்கைக்கு அழைத்துச் சென்றனர்.
மூங்கிலால் செய்யப்பட்ட தற்காலிக மிதவை போன்ற அமைப்பில் சிறுவனை கட்டிவைத்த உறவினர்கள், சுமார் 12 மணி நேரம் அவனை கங்கை தண்ணீரிலேயே மூழ்கி இருக்குமாறு செய்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், அசைவற்றுக் கிடக்கும் சிறுவனை சுற்றி ஏராளமான மக்கள் வேடிக்கை பார்ப்பதும், ஏதேனும் அதிசயம் நடக்கும் என காத்திருப்பதும் பதிவாகியுள்ளது.
முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காததாலும், நீண்ட நேரம் கடும் குளிரில் நீரில் இருந்ததாலும் பாம்பு கடித்த அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.





