ஆட்டம் காணும் சுற்றுலாத்துறை: 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்குகிறது இலங்கை!
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக சுமார் 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியிலும் அதிகளவிலான வெளிநாட்டுப் பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
உத்தேச திட்டத்தின் பிரகாரம் பயணிகள் எவ்வித கட்டணமுமின்றி எளிதாக நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் சுற்றுலா வருகையை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தத் தீர்மானமானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதோடு சர்வதேச அளவில் இலங்கையை சிறந்த சுற்றுலாத் தலமாக முன்னிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குரிய யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, இம்மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.
சுற்றுலாத்துறை வீழ்ச்சி
இலங்கைக்கு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 229,228 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.
இவ்வருடம் மார்ச் மாதம் 183,979 சுற்றுலாப் பயணிகளே வருகை தந்திருந்தனர்.
போர்ச்சூழல் மற்றும் விமான சேவை ரத்து உள்ளிட்ட காரணங்களாலேயே இந்நிலைமை ஏற்பட்டது.
அதாவது 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் மார்ச் மாதத்தில் சுற்றுலாத்துறை 19.7 சதவீதத்தால் வீழச்சியடைந்துள்ளது.





