விவசாயத்தில் விஷம் – பிரித்தானியாவில் கிளைபோசேட் எதிர்ப்பு அலை உயர்வு
பிரித்தானிய விவசாயத் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ‘கிளைபோசேட்’ (Glyphosate) களைக்கொல்லியின் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
1980 களில் ஸ்கொட்லாந்து விவசாயிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை, இன்று பிரித்தானியா முழுவதும் ஆண்டுக்கு 2,200 டொன்னுக்கும் அதிகமான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று தசாப்தங்களில் இதன் பயன்பாடு 10 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
உலக சுகாதார நிறுவனம் இதனை ‘புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணி’ என 2015 ஆம் ஆண்டிலேயே வகைப்படுத்திய போதிலும், இதன் பயன்பாடு குறையவில்லை என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.
குறிப்பாக, மண் வளத்தைப் பாதுகாக்கும் ‘மீளுருவாக்க விவசாய’ முறைக்கு இந்தக் களைக்கொல்லி அவசியம் என ஒரு தரப்பினர் வாதிட்டாலும், பிரான்ஸ் போன்ற நாடுகள் இதனால் ஏற்படும் பார்கின்சன் நோய் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கத் தொடங்கியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே அறுவடைக்கு முந்தைய பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ள நிலையில்,
பிரித்தானியாவில் இதற்கான அனுமதி எதிர்வரும் டிசம்பர் மாதம் புதுப்பிக்கப்படவுள்ளது.
மக்களின் ஆரோக்கியம் மற்றும் வனவிலங்குகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள
கிளைபோசேட்டிற்குப் பதிலாக, நிலையான மற்றும் பாதுகாப்பான மாற்று வழிகளை அரசு ஊக்குவிக்க வேண்டும் எனப் போராட்டக் குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.





