உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரியை மூடிமறைக்க முயற்சி?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் சஹ்ரானை பிரதான சூத்திரதாரியாக்கி, உண்மையை மூடிமறைப்பதற்கு முற்படக்கூடாது. பிரதான சூத்திரதாரி கண்டறியப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி ITAK வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் Gnanamuththu Srinesan
இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உதய கம்மன்பில புத்தகமொன்றை வெளியிட்டுள்ளார். சஹ்ரானை பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு இதன்மூலம் முயற்சிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் 2ஆம் மற்றும் 3ஆம் மட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் ஊடாக உண்மைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றது என அறிகின்றோம்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று ஜனாதிபதிகளின் ஆட்சியின்கீழ் உண்மை வெளிவரவில்லை. எனினும், இந்த அரசாங்கம் 2ஆம் கட்டம்வரை முன்னேறியுள்ளது.
எனவே, முதலாம் மட்ட சந்தேக நபர் யார் என்ற கேள்வி எழுகின்றது. அதனையும் நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டும்.
புத்தகம் எழுதும் முயற்சியில் உண்மைகளை மூடிமறைத்துவிடக்கூடாது. சஹ்ரான்கூட 3ஆம் மட்ட குற்றவாளியாகவே இருக்கின்றார்.
உண்மையை தேடும் அதேபோல பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப்பெற வேண்டும்.” – என்றார் சிறிநேசன் எம்.பி.





