கந்தளாயில் ரயிலில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி
கந்தளாய், வென்ராசன்புர பகுதியில் இடம்பெற்ற துயரமான ரயில் விபத்தில், சிவில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஐ.ஆர். அசங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் திருமணமாகாதவர் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (04) இரவு திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன், தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த இவர் மோதியுள்ளார். வென்ராசன்புரயில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு தண்டவாளம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்துக்கு விரைந்த கந்தளாய் குற்றப் புலனாய்வு துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.






