கொழும்புக்கு எரிபொருள் வழங்க பீஜிங் பச்சைக்கொடி!
இலங்கைக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது என ஆங்கில இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எரிபொருள் கையிருப்பை உறுதிசெய்வதற்காக இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை உதவி கோரி இருந்தது. இதற்குரிய இராஜதந்திர ரீதியிலான பேச்சுகளும் இடம்பெற்றன.
இந்நிலையிலேயே சீனா தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்போது சீனா எரிபொருளை விநியோகிக்கும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய சீனாவில் இருந்து முதல் எரிபொருள் ஏற்றுமதி இந்த மாத நடுப்பகுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன நிறுவனமான சினோபெக் எனர்ஜி லங்காவின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அனுப்பப்படும் எரிபொருள் இருப்புகளுக்கு மேலதிகமாக இந்த விநியோகம் இடம்பெறும் எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, இந்தியாவும் இலங்கைக்கு எரிபொருளை சில நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்திருந்தது.
ரஷ்யாவுடனும் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது. அந்நாட்டின் எரிசக்தி மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





