சடலத்தின் தலை துண்டிப்பு: வவுனியா மயானத்தில் பயங்கரம்!
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றைத் தோண்டி, அதன் தலையை மர்ம நபர்கள் அகற்றிச் சென்றுள்ள அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்திருந்தார்.
மரண விசாரணைகளின் பின்னர் அவரது சடலம் கருப்பணிச்சான்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.
அதே மயானத்தில் அண்மையில் இடம்பெற்ற மற்றுமொரு இறுதிச் சடங்கின் போது, அந்தப் பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அந்த இடத்தைப் பார்வையிட்டபோது, புதைக்கப் பட்டிருந்த சடலம் தோண்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமது மகனின் சடலம் தோண்டப்பட்டு, அதிலிருந்த தலைப்பகுதி மாத்திரம் மர்ம நபர்களால் அகற்றிச் செல்லப்பட்டுள்ளது என்று உயிரிழந்தவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத் தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.





