7 மாதங்களாக தலைமறைவாகி இருந்த குற்றவாளி பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி!
ஆஸ்திரேலியாவில் இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொலைசெய்துவிட்டு சுமார் ஏழு மாதங்களாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி டெஸி ப்ரீமேன், Dezi Freeman விக்டோரியா காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய நேரப்படி இன்று (30) காலை 8.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாலவாவில் உள்ள கிராமப்புறப் பகுதியில் இவர் பதுங்கி இருந்துள்ளார். அவரைச் சரணடையுமாறு பொலிஸார் கோரினர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, ஆயுதங்களுடன் எதிர்த்ததால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் அப்பகுதி மக்களிடையே இருந்த அச்சம் முடிவுக்கு வந்துள்ளதாக காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
டெஸி ப்ரீமேன் தலைமறைவாக இருந்த காலத்தில் அவருக்கு உதவி செய்தவர்களைக் கண்டறியும் விசாரணை வேட்டை முன்னெடுக்கப்படவுள்ளது.
நீதிமன்றம் வழங்கிய பிடிவிறாந்து உத்தரவை நிறைவேற்றுவதற்கு பொலிஸார் சென்றிருந்தவேளையிலேயே அவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றிருந்தார்.
அவரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை இடம்பெற்றது. ஒரு கட்டத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்தனர். இந்நிலையிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.





