போரின் தாக்கம் – பிரித்தானியாவில் செலவை குறைத்து சேமிப்பில் அதிக கவனம் செலுத்தும் மக்கள்
அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் காரணமாக, பிரித்தானியாவில் நுகர்வோர் நம்பிக்கை குறைந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
GfK நிறுவனம் வெளியிட்ட மார்ச் மாத அறிக்கையின்படி, அடுத்த 12 மாதங்களுக்கு பொருளாதார நிலைமை குறித்து மக்களிடையே அதிகமான அச்சமும் சந்தேகமும் உருவாகியுள்ளது.
இதனால், பெரிய அளவில் பொருட்கள் வாங்கும் ஆர்வம் குறைந்து, சேமிப்பில் கவனம் அதிகரித்துள்ளது.
“ஒருவிதமான அச்ச உணர்வு பரவி வருகிறது. பொருளாதாரம் இந்த மோதலின் விளைவுகளை சமாளிக்குமா என்ற நம்பிக்கை மக்களிடம் குறைந்துள்ளது,” என GfK அதிகாரி நீல் பெல்லாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் (ONS) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த பெப்ரவரி மாதத்தில் சில்லறை விற்பனை 0.4% குறைந்துள்ளது.
குறிப்பாக பல்பொருள் அங்காடிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளன.
ஈரமான வானிலை மற்றும் முன்கூட்டியே செலவு செய்திருப்பதும் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
மேலும், நுகர்வோர் நம்பிக்கை குறியீடு மார்ச் மாதத்தில் மைனஸ் 21 ஆகக் குறைந்துள்ளதுடன், எதிர்கால பொருளாதார நிலைமை குறித்த எதிர்பார்ப்பு மைனஸ் 37 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
பொருளாதார நிச்சயமின்மை காரணமாக, மக்கள் பெரிய பொருட்கள் வாங்குவதில் தயக்கம் காட்டி, பணத்தை சேமிக்க முனைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலை தொடர்ந்தால், எதிர்வரும் மாதங்களில் சில்லறை வணிகத் துறைக்கு மேலும் சவால்கள் உருவாகலாம்
என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





