வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID இல் முறைப்பாடு!
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் FCID, வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார்.
வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபா நிதியில் “எக்கோ ரூரிசம்” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
உரிய முறையிலான திட்டமிடல் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த திட்டம் தோல்வியடைந்தது.
அத்துடன் 50 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் பாவனை இன்றி அழிந்து போயுள்ளன என குறித்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் மேற்படி திட்டத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன எனவும் , அரச நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு அப்போதைய யாழ் . மாவட்ட செயலர் நா.வேதநாயகன் ( தற்போதைய வடமாகாண ஆளுநர்) , திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட கால பகுதியில் வேலணை பிரதேச செயலர்களாக கடமையாற்றிய தெ.சுகுணரதி மற்றும் ஆ. சோதிநாதன் ஆகிய மூவரும் பொறுப்பு எனக்கூறியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.





