இந்து சமுத்திரத்தின் பாதுகாப்புக்காக உரிய தலையீடு: இலங்கை உறுதி!
“ இந்து சமுத்திரத்தின் அமைதிதான் எமது எதிர்பார்ப்பாகும். இதற்காக உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்படும்.” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.
இந்து சமுத்திர அமைதி மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05) கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
“இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் உள்ள சர்வதேச எல்லையில் வைத்து அனர்த்தத்துக்குள்ளான ஈரான் கப்பலில் இருந்து 32 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றார்.
87 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட இரு கொள்கலன்கள் தனியார் துறையிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
இந்து சமுத்திரத்தின் அமைதிதான் எமது எதிர்பார்ப்பாகும். அதற்காக அனைத்து தலையீடுகளும் மேற்கொள்ளப்படும். சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் நாம் செயல்பட்டுள்ளோம்.
இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் நோக்கி கருத்துகளை வெளியிடமால், எதிரணிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.” எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.





