பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்தவர் மடக்கி பிடிப்பு: யாழில் பரபரப்பு!
யாழ். சுன்னாகம் நகர் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட்ட இராணுவச் சிப்பாயென சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் நகர்ப் பகுதியில் பெண் ஒருவர் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென அப்பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார்.
இதன்போது, அப்பெண்ணின் சத்தத்தைக் கேட்டு திரண்ட பொதுமக்கள், கொள்ளையனைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்ட நபரைச் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் இராணுவச் சிப்பாய் என்பது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் வலிகாமம் வடக்கு, மயிலிட்டிப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் கடமையாற்றுபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.





