பௌத்த மதத்தையோ மதத் தலைவர்களையோ இழிவுபடுத்த எவருக்கும் உரிமை கிடையாது
பௌத்த மதத்தையோ அல்லது எந்தவொரு மதத் தலைவர்களையோ இழிவுபடுத்த எவருக்கும் உரிமை கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
திஸ்ஸமஹாராம, கமுனுபுரவில் உள்ள ஸ்ரீ விசுத்தராம விகாரையில் அடிக்கல் நாட்டு விழாவில் இன்று (21) கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ நாட்டின் விகாரைக் கட்டமைப்புகள் தற்போது போதிய கவனமின்றி சிதைவடைந்து வருகிறது. அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி பௌத்த மதத்தைப் போற்றிப் பாதுகாப்பதற்காக ரணசிங்க பிரேமதாச புத்தசாசன அமைச்சு மற்றும் நிதியத்தை உருவாக்கினார்.
அதன் மூலம் ஏனைய மதங்களுக்கான அமைச்சுக்களையும் ஏற்படுத்தி அந்தந்த மதக் கலாச்சாரங்களைப் பாதுகாப்பதன் ஊடாக நாட்டின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் உறுதிப்படுத்தப்பட்டது.
சில தரப்பினர் புத்தசாசனத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கவும் இல்லறத்திலுள்ளவர்களுக்கு அத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்கவோ அல்லது மகா சங்கத்தினருக்கு எதிராக விரல் நீட்டவோ உரிமை இல்லை .
காவி உடைக்கும் புத்தசாசனத்திற்கும் மதிப்பளித்து ஏனைய மதங்களையும் மதத் தலைவர்களையும் மதிக்க வேண்டியது அனைத்துப் பிரஜைகளினதும் பொறுப்பு.
“மதம், இனம், சாதி அல்லது வகுப்பைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடக்கூடாது. அவ்வாறு செய்வது ஒரு தனிநபரின் இயலாமையையே காட்டுகிறது.
அரசியல் என்பது மக்கள் சேவையும் சமூக மேம்பாடுமே. நாட்டின் உன்னத சட்டமான அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள விசேட இடத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை, ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது நம்பிக்கை” என்றார்.





