அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய பெண்ணுக்கு 260 கோடி இழப்பீடு!
அமெரிக்காவின் சியாட்டல் நகரில் பொலிஸாரின் வாகனம் மோதி உயிரிழந்த இந்திய பெண்ணின் குடும்பத்தினருக்கு 260 கோடி இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஜானவி கண்டுலா என்ற மாணவி, அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள நோர்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சாலையை கடக்கும்போது பொலிஸாரின் வாகனம் மோதி உயிரிழந்தார்.
அந்தப் பகுதியில் வாகனங்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதி உள்ள நிலையில், வாகனத்தை செலுத்திய பொலிஸ் அதிகாரி நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி 119 கி.மீ வேகத்தில் சென்றது தெரியவந்துள்ளது.
அத்துடன் மாணவியின் இறப்பு குறித்து அவருடன் பயணித்த மற்றொரு பொலிஸ் அதிகாரி கிண்டல் செய்து பேசியது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜான்வியின் உயிருக்கு மதிப்பில்லை என்றும், வெறும் 11,000 டொலர்கள் செக் எழுதி கொடுத்தால் போதுமானது என்றும் அவர் ஏளனமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த விபத்து தொடர்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மற்றும் நகர வழக்கறிஞர் அலுவலகம், தற்போது 29 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
இது இந்திய மதிப்பில் சுமார் 260 கோடி ரூபாயாகும்.





