பிக்குகளை விடுவிக்கக் கோரி திருமலையில் ஆர்ப்பாட்டம்!
திருகோணமலை, சங்கமித்தை விகாரைக்கு முன்பாக இன்று காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக் கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
திருகோணமலை ‘டச்பே’ கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டுமானம் ஒன்றை அமைத்தமை மற்றும் அங்கு புத்தர் சிலையொன்றை நிறுவியமை தொடர்பாக கடந்த மாதம் 14 ஆம் திகதி மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் 4 பௌத்த பிக்குகள் மற்றும் 6 பொதுமக்கள் அடங்குவர். இவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை மற்றும் அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் மீதான பரிசீலனை என்பன நாளைநடைபெறவுள்ளன.
திருகோணமலை மேல் நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றம் ஆகியவற்றில் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இந்தநிலையில், அவர்களுக்குச் சார்பாக நீதி கோரியும், அவர்களை உடனடியாகப் பிணையில் விடுவிக்க வலியுறுத்தியும் ஆதரவாளர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.





