இஸ்ரேல் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் வெடித்த போராட்டம் தீவிரம்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் வருகைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையுடன் நிறைவடைந்துள்ளன.
திங்கட்கிழமை இரவு நடந்த பேரணியில், போராட்டக்காரர்கள் மற்றும் அவுஸ்திரேலிய பொலிஸார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில்அதிகாரிகள் அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்தார்கள் என நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் ஆணையர் மால் லான்யோன் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை சிட்னி பொலிஸ் நிலையம் முன்பாக மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டக்கார்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் என்றும் உடல் ரீதியான பலத்தை பயன்படுத்திய அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்கள் கூறிகின்றனர்.
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் (Isaac Herzog) வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் நேற்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் நேற்று அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் சிட்னியில் போராட்டக்காரர்கள், பலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.
இஸ்ரேலிய ஜனாதிபதி ஹெர்சாக் காசாவில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு உடந்தையாக இருந்தார் என குற்றம் சுமத்தினர்.
இந்நிலையில் ஹெர்சாக்கின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிஸார் போராட்டக்காரர்கள் சிலரை கைது செயததுடன் , கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொண்டனர்.
இதேவேளை, இதற்கு மாறாக, ஆயிரக்கணக்கான யூத சமூக உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், பொண்டி தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் ஹெர்சாக்கை வரவேற்றனர்.





