பாகிஸ்தானில் மசூதியில் தற்கொலை குண்டு வெடிப்பு – 31 பேர் பலி
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று ஜும்மா தொழுகை நடைபெறும்போது, ஒரு மசூதியில் ஏற்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் சுமார் 31 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 169 பேர் காயமடைந்துள்ளனர்.
தர்லாய் பகுதியில் உள்ள கதீஜாதுல் குப்ரா மசூதியின் நுழைவாயில் அருகே குண்டுதாரி வெடிவிபத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெடிப்புக்கு முன் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு, இரத்த தானம் செய்ய பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த தாக்குதலை பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கடுமையாக கண்டித்துள்ளார். குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி, “அப்பாவி மக்களை குறிவைப்பது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்” என்று தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு மசூதி வளாகத்தில் காலணிகள், உடைந்த கண்ணாடிகள் மற்றும் இடிபாடுகள் சிதறிக் கிடந்தன. பலர் தனியார் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தலைநகரில் இவ்வகை தாக்குதல்கள் அரிதானவை என்றாலும், சமீப காலங்களில் பாகிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.




