அடுத்த மாதம் முதலாம் திகதி வரவுசெலவுத் திட்டம் தாக்கல்
இந்திய நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி கூடுகிறது.
அடுத்த நிதி ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் என்பதால் வழக்கம்போல் குடியரசுத் தலைவரின் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கும் என
நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் இறுதி செய்யப்பட்ட தற்காலிக அட்டவணையை
மேற்கோள்காட்டி, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார்.
குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முப்படைகள், மீண்டும் படைக்குத் திரும்பும் பீட்டிங் ரீட்ரீட் விழா ஜனவரி 29 ஆம் திகதி நடைபெற உள்ளதால் அன்றைய தினம் நாடாளுமன்றம் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 30 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும். அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதுடன்
ஜன 31 ஆம் திகதி அன்று நாடாளுமன்ற இரு அவைகளும் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வரவுசெலவுத் திட்டம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்வார்.
குடியரசுத் தலைவரின் உரை மற்றும் மத்திய வரவுசெலவுத் திட்டம் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பிறகு பெப்ரவரி 13 ஆம் திகதியன்று நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.
சுமார் ஒரு மாத கால ஒத்திவைப்புக்குப் பிறகு மார்ச் 9 ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என்பதுடன் கூட்டத்தொடர் ஏப்ரல் 02 ஆம் திகதி முடிவடையும்.
வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமைகளில் ஒத்திவைக்கப்படும். ஆனால், ஏப்ரல் 3 ஆம் திகதி புனித வெள்ளி என்பதால் ஏப்ரல் 2 ஆம் திகதியே நாடாளுமன்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது





