அவுஸ்ரேலிய மாட்டிறைச்சிக்கு 55 சதவீத கூடுதல் வரி அறிவிப்பு
தனது நாட்டு கால்நடைத் தொழில்துறையைப் பாதுகாக்கும் நோக்கில், அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்கு 55 சதவீத கூடுதல் வரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட இறக்குமதி ஒதுக்கீடு அளவைத் தாண்டும் போது, அவுஸ்ரேலியா , பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்த வரி அமுல்படுத்தப்படும்.
இந்தத் தீர்மானம் தமக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அவுஸ்ரேலிய இறைச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைச் சிதைப்பதுடன், அவுஸ்ரேலியாவின் ஏற்றுமதி வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த காலங்களில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சியின் அளவு அதிகரித்துள்ள நிலையில், புதிய ஒதுக்கீடு முறை பெரும் சவாலாக அமையும் எனப் பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் அந்தோனி அல்பானிஸ், இது அவுஸ்ரேலியாவை மட்டும் இலக்கு வைத்த நடவடிக்கை அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்ரேலிய மாட்டிறைச்சி உலகின் மிகச்சிறந்த தரம் வாய்ந்தது என்றும், இதற்கான உலகளாவிய கேள்வி என்றும் குறையாது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், பாதிப்புகளைத் தவிர்க்க சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





