என்.பி.பி. ஆட்சியை நம்புகிறது சர்வதேசம்: குவிகிறது உதவி!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல், மோசடி இடம்பெறாது என சர்வதேச சமூகம் நம்புகின்றது. அதனால்தான் சர்வதேச உதவிகள் அதிகளவு கிடைக்கப்பெறுகின்றன என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இலங்கை அரசாங்கம்மீது சர்வதேசம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்த ஆட்சியின்கீழ் ஊழல், மோசடிகள் இடம்பெறாது என்பதாலேயே அதிகளவு சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன.
இந்த ஆட்சியின்கீழ் சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறமாட்டாது என சிலர் கூறிவந்தாலும் அது பொய்யென்பது உறுதியாகியுள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களும் உதவிகளை வழங்கிவருகின்றனர். நாட்டு மக்களும் தம்மால் முடிந்த பங்களிப்பை செய்துள்ளனர்.
இவர்களுக்கு நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் உதவிகளை வழங்கும்.
மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனைத்து நிவாரண உறுதிமொழிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என்றார்.





