இடர் முகாமைத்துவ பொறிமுறையை மாற்றுமாறு வலியுறுத்து!
பேரிடரில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இடர் முகாமைத்துவ பொறிமுறையை நாம் மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட நிலையில் அடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்தவேளையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ காலநிலை மாற்றங்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் அபாயங்கள் குறித்து தெரிவிக்கும் முறையான முன்னெடுப்பு நடவடிக்கை உரியவாறு இயங்கவில்லை என்பது தெரியவருகிறது.
அபாயத்தை முன்கூட்டியே மக்களுக்கு அறிவித்திருந்தால், இழப்புகளை ஓரளவுக்குக் குறைத்திருக்கலாம்.
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்தபோது, இடர் முகாமைத்துவ நிலைய பொறிமுறை ஏன் உரியவாறு செயற்படாது போனது என்பதை நினைத்துப் பார்க்க முடியாதுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள், செய்திச் சேவைகள் மற்றும் வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்கள் 15 நாட்களாக எச்சரிக்கை விடுத்த போதிலும், இதுபோன்ற ஆபத்து இருந்தபோதிலும் இடர் முகாமைத்துவ பொறிமுறை ஏன் முறையாக இயங்கவில்லை என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகின்றன.
அனர்த்தம் குறித்து அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காதிருப்பது பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றது.
சுனாமியிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளாவிட்டாலும், இந்தப் பேரழிவிலிருந்தேனும் நாம் பாடம் கற்றுக்கொண்டு, நமது நாட்டில் ஏற்படும் பல்வேறு வானிலை மற்றும் காலநிலை தாக்கங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இடர் முகாமைத்துவ பொறிமுறையை நாம் மாற்றியமைக்க வேண்டும்.” என்றார்





