விண்வெளிக்குச் சென்ற 4 எலிகள் பூமிக்குத் திரும்பின – உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்
விண்வெளி ஆய்வுக்காக சென்ற சீன விண்வெளி வீரர்களுடன் அனுப்பப்பட்ட 4 எலிகள் நீண்ட கால தாமதத்தின் பின்னர் பூமிக்குத் திரும்பியுள்ளன.
கடமைகளை முடித்துக் கொண்டு பூமிக்குத் திரும்ப தயாரான விண்கலத்தில் சேதம் ஏற்பட்டமையினால், அந்தப் பயணம் தடைப்பட்டது.
இதன் காரணமாக விஞ்ஞானிகளுடன் நான்கு எலிகளும் விண்வெளியில் தங்கியிருந்தன.
இவ்வாறான நிலையில், பூமிக்குத் திரும்பிய உடனேயே, எலிகளின் நடத்தை மற்றும் உடலியல் ஆய்வுகளுக்காக ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
விண்வெளியில் இருந்த காலப்பகுதியில் எலிகள் குறைவான உணவை உட்கொண்டுள்ளன. எனினும் அதிகமாகத் தண்ணீர் அருந்தியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை சீன அரச தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் சிறு பாலூட்டிகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த எலிகள் விண்வெளியில் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டதாக ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைவான புவியீர்ப்புச் சூழலுக்கும் ஏற்றபடி அவை மிகக் குறுகிய காலத்தில் மாறிக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த எலிகளுடன் பூமிக்குத் திரும்பவிருந்த Shenzhou-20 விண்கலத்தின் ஜன்னல் பகுதியில் சிறிய விரிசல்கள் ஏற்பட்டதன் காரணமாகவே பூமிக்கு திரும்ப தாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.





