ஒரே நேரத்தில் 3 கண்காணிப்புச் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவத் தயாராகும் ஈரான்
ஒரே நேரத்தில் மூன்று கண்காணிப்புச் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானில் தயாரிக்கப்பட்ட பயா, ஜாபர், கோவ்சர் ஆகிய மூன்று கண்காணிப்புச் செயற்கைக்கோள்களே இவ்வாறு ஏவப்படவுள்ளன.
அதற்கமைய, அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரே நேரத்தில் அவற்றை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் விதித்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், விண்வெளித் திட்டத்தில் பெரிய முன்னேற்றங்களை ஈரான் கண்டுள்ளதாக ஈரானிய விண்வெளி அமைப்பின் தலைவர் ஹசன் சலாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் செயற்கைக்கோள்கள் விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பான தரவுகளை வழங்கும் எனவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.





