கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் – 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை வழங்கிய விஜய்!

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை விரைவில் சந்திப்பேன் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னதாக அறிவித்தப்படி 41 குடும்பங்களுக்கும் இழப்பீட்டு தொகையாக 20 இலட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மக்களை சந்திக்க சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாகச் சந்திப்போம்.
நாம் அறிவித்தபடி குடும்பநல நிதியாக 20 லட்சம் ரூபாவை ஆர்டிஜிஎஸ் வழியாக அனுப்பி வைத்துள்ளோம். அதனை நமது உதவிக்கரமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வினால் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். குடும்ப உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம். இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்” எனக் கூறியுள்ளார்.
கரூரில் ஏற்பட்ட மேற்படி அசம்பாவிதம் சார்பாக தற்போது சிபிஐ விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குறித்த பகுதிக்கு விஜயம் செய்த அதிகாரிகள் கள ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.