இந்தியர்களின் 80 சதவீத விசா விண்ணப்பங்களை இரத்து செய்த கனடா

கனடாவில் படிக்க விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் விண்ணப் பங்களில், 80 சதவீதம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடும் கட்டுப்பாடு உள்ள நிலையில், கனடாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக இந்தாண்டு துவக்கத்தில் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், குடியேற்றம் தொடர்பான பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார்.
குறிப்பாக, மாணவர் விசாவில் கடுமையான நிபந்தனைகளை விதித்தார். மேலும், சிறிய சிறிய விஷயங்களாக, வெளிநாட்டவரை வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்தார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் படிப்பதற்காக திட்டமிட்டிருந்த இந்திய மாணவர்கள், வேறு நாடுகளை நாடத் துவங்கினர். அதில் அவர்களுடைய முக்கியமான தேர்வாக, வட அமெரிக்க நாடான கனடா இருந்தது.
கனடாவிலும் வெளிநாட்டவருக்கு விசா வழங்குவதில் சமீபத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், மாணவர் விசா கேட்டு இந்தியர்கள் கொடுத்த விண்ணப்பங்களில், 80 சதவீதம் அளவுக்கு நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த பத்தாண்டுகளில் இந்தளவுக்கு மாணவர் விசா நிராகரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதையடுத்து இந்திய மாணவர்கள், ஜெர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு படிப்பதற்காக செல்கின்றனர்.
விசா நிபந்தனைகளை கடுமையாக்கியதுடன், கட்டணத்தையும் கனடா அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, விசா எண்ணிக்கையையும் குறைத்து உள்ளது.
நடப்பாண்டில், மாணவர் விசா எண்ணிக்கையை, 4.37 லட்சமாக கனடா குறைத்துள்ளது. இது கடந்தாண்டைவிட, 10 சதவீதம் குறைவாகும்.