உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு இந்தியா நிதியுதவி செய்வதாக டிரம்பின் உயர்மட்ட உதவியாளர் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முக்கிய ஆலோசகரான ஸ்டீபன் மில்லர் இந்தியாமீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு உதவும் விதமாக இந்தியா மாஸ்கோவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது, இது ரஷ்யாவுக்கு நிதி உதவியாக உள்ளது என்று மில்லர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏற்கெனவே இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா கூறிவரும் நிலையில் தற்போது மில்லரின் குற்றச்சாட்டால் இந்தியாவுக்குக் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் துணை ஆலோசகராக உள்ளார் மில்லர்.“அதிபர் டிரம்ப் தெளிவாகச் சொல்லிவிட்டார், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக்கூடாது, போருக்கு உதவுவதை நிறுத்த வேண்டும்,” என்று மில்லர் குறிப்பிட்டார்.
இந்தியா சீனாவுடன் இணைந்து ரஷ்ய எண்ணெய்யை வாங்குகிறது, என்றும் மில்லர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.மேலும், அதிபர் டிரம்ப்புக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் அருமையான நட்பு உள்ளது, என்றும் அவர் குறிப்பிட்டார்.
மில்லரின் குற்றச்சாட்டுக்கு வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் உடனடியாகப் பதில் ஏதும் அளிக்கவில்லை.
இந்நிலையில், இந்திய அரசாங்கம் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி, ராணுவ ஆயுதங்கள் வாங்கும் காரணங்களால் இந்திய இறக்குமதிகளுக்கு 25%அடிப்படை வரி விதித்தது அமெரிக்கா.
ரஷ்யா உக்ரேன் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் மாஸ்கோவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள்மீதான இறக்குமதி வரி 100% உயர்த்தப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.