தொழிலாளர் புள்ளிவிவர பணியகத்தின் தலைவர் பணி நீக்கம் ; டிரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.தற்போது நாட்டின் தொழிலாளர் புள்ளிவிவரத் துறையின் உயர் அதிகாரியை பதவியிலிருந்து நீக்கி உள்நாட்டுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
மோசமான வேலைவாய்ப்பு நிலவரத்தைக் காட்டும் அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் அதிகாரியின் பதவி பறிக்கப்பட்டது.புள்ளி விவரங்களை ஆதாரமில்லாமல் கையாள்வதாக அந்த அதிகாரி மீது டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கெனவே வட்டி விகிதத்தைக் குறைக்காததால் மத்திய வங்கி ஆளுநரை டோனல்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் அந்த ஆளுநரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் எதிர்பாராதவிதமாக தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இரண்டு துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஏற்கெனவே பலவீனமான வேலைவாய்ப்புச் சந்தை, வரி விதிப்பு அறிவிப்புகளால் தத்தளித்துக் கொண்டிருந்த பங்குச்சந்தை மேலும் ஆட்டம் கண்டுள்ளது.
எஸ்&பி500 குறியீடு இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.6% வீழ்ச்சி கண்டது.
முன்னாள் அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட எரிகா மெக்கன்டார்ஃபரின் வேலைவாய்ப்பு எண்கள் போலியாக இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறினார்.ஆனால் டிரம்ப்பின் கூற்றுக்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.
அமெரிக்காவின் பொருளியலுக்கு மிக முக்கியமான வேலை வாய்ப்புச் சந்தை, பயனீட்டாளர் குறியீடு உள்ளிட்டவற்றை எரிகா மெக்கன்டார்ஃபர் தலைமையிலான புள்ளியியல் துறை பகுப்பாய்வு செய்து வெளியிட்டு வருகிறது.
சென்ற வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜூலை மாதத்தில் 73,000 வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.மேலும் மே மற்றும் ஜூன் மாதங்களில் முன்னர் அறிவிக்கப்பட்டதைவிட 258,000 குறைவான வேலை வாய்ப்புகள் இருந்ததாக கீழ்நோக்கி திருத்தப்பட்ட தரவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.