இலங்கை மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த எச்சரிக்கை

இலங்கை பொதுமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மோசடி தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியைப் போல நடித்து நிதியுதவிகள் மற்றும் சலுகைகள் வழங்குவதாக போலி வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கும் நபர் ஒருவரை அடையாளம் கண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இதுபோன்ற மோசடிகளைத் தடுக்கும் வகையில் அதிகாரப்பூர்வ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இளைஞர்களான தொழில்முனைவோர்களை குறிவைத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் மானியங்கள் அல்லது நிதி வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி அந்த நபர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் நம்பிக்கை கொண்டு சிலர் பணம் செலுத்தியதும், பின்னர் அவர் தொடர்பு இல்லாமல் மாயமாகிவிட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலுக்கு பதிலளித்து, இது முற்றிலும் மோசடியானது எனவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பெயரில் ஏதேனும் நிதியுதவிகள் வழங்கப்பட்டால் அவை அனைத்தும் அதிகாரப்பூர்வத் தேர்வுத் திட்டங்கள், திட்ட சமர்ப்பிப்புகள் மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகளின் மூலமாக மட்டுமே வழங்கப்படும் என ஒன்றியம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மானியங்கள் மற்றும் கொள்முதல் ஒப்பந்தங்களை பெற, எந்தவொரு மூன்றாம் தரப்பு முகவர்களிடமும் அல்லது தனிநபர்களிடமும் பணம் செலுத்த தேவையில்லை. அந்த அமைப்பின் நிதியுதவிகள் வெளிப்படையான முறையில் செயல்படுத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. சந்தேகத்துக்கிடமான நபர்கள் அல்லது தகவல்களை எதிர்கொண்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ நிறுவனங்களிடம் புகாரளிக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், அத்தகைய மோசடி நடவடிக்கையை தாமதமின்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.