40 வயதை நெருங்குபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்

40 வயதுக்கு மேல் எலும்புகளின் வலிமை குறையலாம். கை, கால்கள், கழுத்து என வலிகளின் ஆரம்பமாவது இந்த வயதில் தான் பெரும்பாலும் இருக்கும். 40 வயதை கடந்துவிட்ட தாய்மார்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை. 40 வயதை கடக்கும் ஆண்கள், வயது என்பது வெறும் எண் தான், அதனால் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
40 வயதை நெருங்குபவர்கள் நீண்ட நாட்கள் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் தங்களது உடலையும், மனதையும் வைத்துக் கொள்ள இந்த 7 விஷயங்களை கடைபிடித்தால் போதும்…
1.சரியான நேரத்தில் உறக்கம்
இரவில் சீக்கிரமாக உறங்கி அதிகாலையில் விரைவாக எழுந்து கொள்வதை வழக்கமாக வைத்திருங்கள். அவ்வாறு வைத்திருந்தால் உங்கள் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
2.புகைப்பிடிப்பதை கைவிடவும்
புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாற்பது வயதிற்கு முன்பாக அதனை கைவிடுவது நல்லது. அப்படி கைவிடும் நபர்களின் ஆயுள் தொடர்ந்து புகை பிடிப்பவர்களை விட 9 ஆண்டுகள் அதிகமாக வாழ்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
3.உடல் எடை
உடல் எடையை அடிக்கடி பரிசோதிப்பதையும், அதனை சீராக வைத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்வதும், உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
4.பயணம் மேற்கொள்ளுதல்
மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை, உங்களது இயல்பு வாழ்க்கையில் இருந்து வெளியேறி, வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்களுக்கு புதிய அனுபவங்களையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
5.தண்ணீர் பருகவும்
அதிகமாக தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்கலாம். அதிகமாக தண்ணீர் குடிப்பதால், துரித உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது குறையும்.
6.நேர்மறை சிந்தனை
நேர்மறை சிந்தனை நமக்கு அதிக நம்பிக்கையை கொடுக்கும். நம் எண்ணங்களை நல்வழிப்படுத்தவும் மன அழுத்தம் மற்றும் அது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும் செய்யும். நேர்மறை சிந்தனைகள் நம் உடலுக்கும் மனதிற்கும் பல வகையான நலன்களையும் தரும்.
7.சரும பாதுகாப்பு
பரபரப்பான இந்த காலகட்டத்தில் சரும ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. நவீன உலகில், தூசி, மாசு, புகை மற்றும் செயற்கை ரசாயனங்கள் மூலம் சருமம் பாதிப்படைகிறது. இதனை தடுக்க ஆரோக்கியமான வழிமுறைகளை கடைபிடியுங்கள். முடியவில்லை என்றால், அடிக்கடி முகத்தை கழுவுங்கள். அதுவே உங்களை பல பிரச்சினைகளில் இருந்து காக்கும்.