டெலிவரி ஊழியர்களுக்கு அதிர்ச்சி – மனித உருவ ரோபோக்களை களமிறக்கும் அமேசான்

ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், டெலிவரி ஊழியர்களின் பணிகளில் மனித உருவ ரோபோக்களை களமிறக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனை மேற்கொள்ளும் திறன் கொண்ட மனித உருவ ரோபோக்களுக்கான செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கி வருகின்றது.
இந்தத் திட்டத்திற்காக, கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது அலுவலகம் ஒன்றில், ‘ஹியூமனாய்டு பார்க்’ என்ற பெயரில் பிரத்யேக சோதனைத் தளம் ஒன்றை அமேசான் அமைத்து வருகிறது.
இந்த உட்புற சோதனைத் தளத்தில் பல்வேறு தடைகளை அமைத்து, மனித உருவ ரோபோக்களின் செயல்பாடுகளை விரைவில் சோதிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போதைக்கு, இந்த ரோபோக்களை இயக்குவதற்கான செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருளை அமேசான் உருவாக்கி வந்தாலும், சோதனைகளுக்காக மற்ற நிறுவனங்களிடமிருந்து வன்பொருட்களை (Hardware) பயன்படுத்த உள்ளது.
இந்த செய்தி குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. அமேசான் நிறுவனமும் இதுகுறித்து உடனடியாக எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
சமீபத்தில், தனது கிடங்குகளில் உள்ள ரோபோக்கள் மற்றும் டெலிவரி சேவைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அதிவிரைவாகக் கொண்டு சேர்க்கும் திட்டங்கள் குறித்தும் அமேசான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, மனித உருவ ரோபோக்களை உருவாக்கும் இந்த செய்தி, எதிர்காலத்தில் டெலிவரி துறையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.