இருதரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா – இலங்கை இடையே கலந்துரையாடல்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இலங்கையின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் கலந்து கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவ பரிமாற்றங்கள், கூட்டுப் பயிற்சி வாய்ப்புகள், திறன் மேம்பாடு, அனர்த்த முகாமைத்துவ ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான உதவி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையுடன் நெருக்கமான மற்றும் நட்புறவைப் பேணுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்திய பாதுகாப்புச் செயலாளர் இந்த சந்திப்பின் போது மீண்டும் வலியுறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்குப் பங்களிக்கும் வகையிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்குமான உறுதிப்பாட்டையும் இந்திய பாதுகாப்புச் செயலாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
அதேநேரம், இரு தரப்பினரும் வழக்கமான உயர் மட்ட ஈடுபாடுகளைத் தொடரவும், குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும் இணக்கம் தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.