பெரு சுரங்கத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கடத்தப்பட்ட ஊழியர்கள்

தென்னமெரிக்க நாடான பெருவில் பல நாள்களுக்குமுன் கடத்தப்பட்ட 13 ஊழியர்கள் சுரங்கம் ஒன்றில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
தலைநகர் லீமாவுக்கு வடக்கே உள்ள பட்டாஸ் மாநிலத்தில் பொடிரோஸா என்ற சுரங்க நிறுவனத்துக்குச் சொந்தமான தங்கச் சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை செய்தனர்.
அந்த வட்டாரத்தில் சட்டவிரோத சுரங்க வேலை செய்யும் கும்பலைத் தட்டிக்கேட்க நிறுவனத்தின் ஊழியர்கள் அனுப்பப்பட்டனர். ஆனால், சுரங்கத்தை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்த குற்றக் கும்பல், ஊழியர்களைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது.
சுரங்கத்துக்குள் அவர்களைப் பிணை பிடித்த கும்பல், கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு அவர்களின் உற்றார் உறவினர்களுக்கு மிரட்டல் விடுக்கும் கடிதங்களை அனுப்பியது.
கடந்த சில ஆண்டுகளில் சுரங்கங்களைக் குறிவைக்கும் குற்றச் சம்பவங்கள் பெருவில் அதிகரித்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை (மே 2) கிட்டத்தட்ட 8,000 ஊழியர்களைக் கொண்ட பொடிரோஸா நிறுவனம் சட்டவிரோத சுரங்க வேலைகளைத் தடுக்க காவல்துறை போதுமான நடவடிக்கை எடுக்காததை எண்ணி வருத்தப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சுரங்க ஊழியர்கள் கொல்லப்பட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.இருப்பினும், அவர்களை ஏன் அந்தக் கும்பல் கொலை செய்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.