மும்பையை அதிர விட்ட ஏ.ஆர்.ரகுமான் : சிறப்பு விருந்தினராக வந்த தனுஷ்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இதனால் நாடு முழுவதும் இவரது பாடல்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி உலகமெங்கும் ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரகுமான்.
அந்த வகையில் மும்பையில் நேற்று இரவு ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அவரது பாடல்களைக் கேட்க அரங்கம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர் அண்மையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன்பின் அவர் பங்கேற்ற முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும். இதில் முழு எனர்ஜியோடு ஏ.ஆர்.ரகுமான் பாடியதை கேட்டு ரசிகர்கள் வைப் ஆகினர்.
இந்த இசை நிகழ்ச்சியில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் இதில் நடிகர் தனுஷும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது மட்டுமின்றி, மேடையேறி ஏ.ஆர்.ரகுமான் உடன் சேர்ந்து பாடல் ஒன்றையும் பாடி அசத்தினார். அதுவும் தமிழ்பாடலை பாடினார் தனுஷ். தனது 50வது படமான ராயன் படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் தான் பாடிய அடங்காத அசுரன் பாடலை தான் பாடினார் தனுஷ். அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.