போர் நிறுத்தம் தொடர்பில் உக்ரேனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அமெரிக்கா

ரஷ்யா-உக்ரேன் இடையிலான போரை நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் மார்ச் 23ஆம் திகதி உக்ரேன் அதிகாரிகளுடன் அமெரிக்கா பேச்சு நடத்தும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசினார், அதையடுத்து விட்காஃப் உக்ரேன் அதிகாரிகளை வரும் ஞாயிற்றுக்கிழமை ஜெட்டாவில் சந்திக்கப்போவதாகக் கூறினார்.
அமெரிக்கப் பேராளர்களை வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்சும் வழிநடத்துவார்கள் என்று திரு விட்காஃப் குறிப்பிட்டார்.
“எரிசக்தி உட்கட்டமைப்பு, கருங்கடல் மீதான தாக்குதல்களை நிறுத்த ரஷ்யா ஒப்புக்கொண்டது. அதேபோல் உக்ரேனும் அதை ஒப்புக்கொள்ளும் என்று நினைக்கிறேன்,” என்று விட்காஃப் கூறினார்.
இந்நிலையில், ரஷ்யா அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை நிராகரிப்பதாக உக்ரேன் குற்றஞ்சாட்டியுள்ளது.
எரிசக்தி உட்கட்டமைப்பைத் தாக்கமாட்டோம் என்று கூறிய சில மணி நேரங்களிலேயே ரஷ்யா குடியிருப்பாளர்கள் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் தெரிவித்தது.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் நடக்கும் போரைத் தற்காலிகமாக 30 நாள்கள் நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.