ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோர பகுதியை நோக்கி விரையும் ‘ஆல்ஃபிரட் ‘சூறாவளி

ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியை நோக்கி ‘ஆல்ஃபிரட்’ சுறாவளி விரைவதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிரிஸ்பன் நகரிலிருந்து 550 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்பகுதியில் சூறாவளி மையம் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.மார்ச் 6 அல்லது மார்ச் 7ல் சூறாவளி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிஸ்பன் நகருக்கும் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமான சன்ஷைன் கோஸ்ட் கடற்கரைக்கும் இடையிலுள்ள பகுதியில் சூறாவளி கரையைக் கடக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.ஆனால், சூறாவளி நெருங்குவதால் அவை செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) வெறிச்சோடிக் கிடந்தன.
கடந்த 50 ஆண்டுகளில் அப்பகுதியில் சூறாவளி கரையைக் கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆகக் கடைசியாக 1974ஆம் ஆண்டில் அப்பகுதியில் சூறாவளியால் பாதிப்பு ஏற்பட்டது.
பிரிஸ்பனையும் சன்ஷைன் கோஸ்ட்டையும் இணைக்கும் 100 கிலோமீட்டர் தூர கடலோரப் பகுதியில் ஏறத்தாழ மூன்று மில்லியன் பேர் வசிக்கின்றனர்.
சூறாவளி காரணமாகப் பிரிஸ்பன் நகருக்குத் தெற்குப் பகுதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஆறுகளில் நீர் நிரம்பி வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மிக மோசமான பாதிப்புக்குத் தயாராகும்படி நியூ சவுத் வேல்ஸ் நகரங்களுக்கு அம்மாநில முதல்வர் கிறிஸ் மின்ஸ் உத்தரவிட்டுள்ளார்.