கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் : மேலும் மூவர் கைது!

பாதாள உலக நபர் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவிய மேலும் மூவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைதுகளின் மூலம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (23) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் கம்பஹா மற்றும் உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா, மல்வத்தை வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமைக்காகவும், குற்றத்திற்கு முந்தைய நாள் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அதனை வழங்கியதற்காகவும் கைது செய்யப்பட்டார்.
மேலும், சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் மற்றுமொரு சந்தேக நபரையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று குற்றத்திற்கு உதவிய உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது மற்றும் 19 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளனர்.