யாழில் வீடு புகுந்து கொள்ளையடித்த சிறுவர்கள் : ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மாயம்!
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெருடாவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், குறித்த இருவரும் வீட்டின் புகைக்கூட்டின் வழியாக உள்ளே நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அத்துடன் பணத்தை பார்த்தவுடன், நெடுங்கேணியில் உள்ள ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் தெரிவித்துள்ளனர். அவரின் பணிப்புரைக்கு அமைய மேற்படி பணத்தை களவாடிச் சென்றுள்ளனர்.
அத்துடன் திருடப்பட்ட பணம் நெடுங்கேணியில் உள்ள காணியொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 74 இலட்சம் ரூபாயை மீட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் நீதிமன்ற அனுமதி பெற்று, தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய வல்வெட்டித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




