இலங்கை செய்தி

வட்டுக்கோட்டை பொலிஸாரால் பல்கலைக்கழக மாணவன் கொடூர சித்திரவதை

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து பொலிஸார் தன்னைத் தலைகீழாகத் தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர் என்று யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில், கருணாகரன் நிதர்சன் எனும் யாழ். பல்கலைக்கழக மாணவன் இன்று இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவிக்கையில்,

“வட்டுக்கோட்டை மாவடி பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் என்னை வழிமறித்து, தான் மறிக்கும் போது ஏன் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை என என்னுடன் முரண்பட்டார்.

அதற்கு நான் நீங்கள் மறித்ததை கவனிக்கவில்லை எனக் கூறி, ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன எனக் கூறி அவற்றை எடுத்துக் கொடுத்தபோது , அதனை வாங்காது , மேலதிக பொலிஸாரை அவ்விடத்துக்கு வரவழைத்தார்.

அதன்போது , சிவில் உடையில் வந்த 7 இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவ்வித விசாரணைகளும் இன்றி, என்னை வீதியில் வைத்து, மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே கடுமையாகத் தாக்கினார்கள். என்னைத் தாக்கும் சம்பவம் அருகில் உள்ள கடையில் கண்காணிப்புக் கமராக்களில் கூட பதிவாகியுள்ளது. அத்துடன் நானும் எனது கைபேசியில் என்னைத் தாக்குவதை வீடியோ எடுத்தேன்.

பின்னர் என்னைப் பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று, பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறைக்குள் என்னை அழைத்து சென்று என்னுடைய ஆவணங்கள் மற்றும் கைபேசி என்பவற்றைப் பறித்தார்கள்.

கைபேசியின் இரகசியக் குறியீட்டைக் கேட்டபோது, அதனைத் தர முடியாது என நான் மறுத்தபோது, என் கால்களைப் பிடித்து தலைகீழாகத் தூக்கிக் கடுமையாகத் தாக்கினார்கள்.

என் ஆணுறுப்பைக் குறிவைத்தும் கடுமையாகத் தாக்கினார்கள். இதனால் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வியர்க்கத் தொடங்கியது.

அதையடுத்து என்னை அறையில் இருந்து, வெளியே அழைத்து வந்து , கதிரையில் அமர வைத்து விட்டு சென்று விட்டார்கள்.

பின்னர் நான் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி வந்தேன். என்னைப் பொலிஸாரின் இரகசிய அறைக்குள் அழைத்துச் சென்றதைப் பொலிஸ் நிலையத் தடுப்புக் காவலில் நேற்று தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூவர் கண்களால் கண்டார்கள்.

அறைக்குள் வைத்து அடிக்கும்போது, நான் எழுப்பிய அவலக்குரல் அவர்களுக்கும் கேட்டு இருக்கும். அடித்த பின்னர் என்னைக் கைத்தாங்கலாகப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அழைத்து வந்து கதிரையில் அமர வைத்ததையும் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூவரும் நேரில் கண்டார்கள்.

எவ்வித குற்றமும் இழைக்காத என்னைச் சிவில் உடை தரித்த பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கிச் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். என்னைக் கொலை செய்யும் நோக்குடன் என் ஆணுறுப்பைக் குறிவைத்தும் அவர்கள் தாக்கினார்கள்.

இந்நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளமையால் இன்று யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன்.” – என்றார்.

இதேவேளை , வட்டுக்கோட்டை பொலிஸாரால், கடுமையான சித்திரவதைக்கு உள்ளான நகராசா அலெக்ஸ் எனும் இளைஞர் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

குறித்த உயிரிழப்பானது ஆட்கொலையே என யாழ். நீதிவான் நீதிமன்றம் மரண விசாரணை கட்டளையில் குறிப்பிட்டுள்ளது

இளைஞரின் கொலை தொடர்பில் நேரடி சாட்சியான, இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞர், சித்திரவதைக்குத் தம்மை உள்ளாக்கியவர்கள் ஐவர் என அடையாளம் காட்டிய போதிலும், பொலிஸார் நால்வரையே கைது செய்து மன்றில் முற்படுத்தி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த வாரம் சுன்னாகம் பொலிஸாரால் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கடுமையாகத் தாக்கி சித்திரவதைக்கு உள்ளாக்கிய நிலையில், கைதான இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இருந்தார்.

அச்சுவேலி பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது , விசாரணைக்குச் செல்லாத இளைஞரை அச்சுவேலி பொலிஸார் வீதியில் வழிமறித்துக் கடுமையாகத் தாக்கியமையால், இளைஞர் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது வட்டுக்கோட்டை பொலிஸாரால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பேரணியில் பொலிஸார் மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content