இலங்கையில் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசிகள் காலாவதியாகியுள்ளன!
																																		கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக அரச மருந்து ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 10,736 மில்லியன் ரூபா பெறுமதியான 7,951,710 டோஸ் பைசர் தடுப்பூசி காலாவதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
2022ஆம் ஆண்டு தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அறிக்கையின்படி குறித்த தடுப்பூசி கையிருப்பு 2022 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் பதிவு செய்யப்படாத 18,516 ஆயுர்வேத வைத்தியர்கள் இருப்பதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆயுர்வேத வைத்தியர்கள் 05 வருடங்களுக்கு ஒருமுறை தமது பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் தமது பதிவை புதுப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட 26,650 பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்களில் 3,827 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆனால் சரியான தகவல்கள் புதுப்பிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உயிரிழந்த வைத்தியர்களின் பதிவுச் சான்றிதழ்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
        



                        
                            
