சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் மே 28ஆம் திகதி வரை மொத்தமாக 1,010,807 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மே மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரை மட்டும் 134,530 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 56,063 ஆக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,582 பேரும், சீனாவிலிருந்து 8,439 பேரும் வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியிலும் இந்தியாவே இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாக உள்ளது. இந்தியாவிலிருந்து மொத்தம் 245,981 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 97,427 பேரும், ரஷ்யாவிலிருந்து 75,963 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மேலும், இந்த ஆண்டில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக பெப்ரவரி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாதத்தில் மட்டும் 277,327 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அதேவேளை, பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் வருகையில் படிப்படியாக சிறிய அளவில் குறைவு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.




