வடக்கில் வெசாக் நிகழ்வுகளுக்குத் தடையா? சிஐடியில் முறைப்பாடு!
வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், அலங்கார ஏற்பாடுகளுக்கும் ஆளுநர் தடை விதித்துள்ளார் என வெளியாகும் தகவல் போலியானது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்றது.
இதன்போது வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களை செய்வதற்கும் அம்மாகாண ஆளுநர் தடை விதித்துள்ளார் என சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு – பகிரப்பட்டுவரும் தகவல் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“இது பொய்யான செய்தியாகும். தேசிய சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் இப்படியான போலியான செய்திகளை தயாரித்த நபர்களுக்கு எதிராக, உரிய நடவடிக்கை எடுக்குமாறுகோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால் சிஐடியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என நாமும் கோரிக்கை விடுக்கின்றோம்.” – என்றார்.




