யாழில் ஹெரோயினுடன் கைதான பெண்ணுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறை!
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு 7 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
யாழ்ப்பாணம் – பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தண்டனைக்குள்ளானவராவார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாத பகுதியில், மேற்படி பெண் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன்போது அவரது உடைமையிலிருந்து 1 கிராம் 475 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், இன்று வியாழக்கிழமை இவ்வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, எதிரியான பெண் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவரை குற்றவாளியாகக் கண்ட நீதிமன்றம், அவருக்கு 7 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.
அத்துடன், குற்றவாளிக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், அதனைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக ஒரு வருட கால சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் யாழ். மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.




