ரூபாயின் தொடர் சரிவு : அதிகரித்த வாழ்க்கை செலவால் திண்டாடும் மக்கள்!
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள், அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 331 ரூபாயை தாண்டியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, மத்திய வங்கி புழக்கத்தில் உள்ள டொலர்களை வாங்குவதால் டொலர்களுக்கான தேவை அதிகரித்ததும், புழக்கத்தில் ரூபாய் அதிகமாக இருப்பதும் ரூபாயின் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறினார்.
சுற்றுலாத் துறையிலிருந்து கிடைக்கப்பெறும் டொலர்கள் பற்றாக்குறையால் புழக்கத்திற்கு வரும் டொலர்களின் அளவு குறைந்ததும், உலகின் புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக ஏற்றுமதியில் ஏற்பட்ட தாக்கமும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
ரூபாயின் மதிப்பு இதே வழியில் தொடர்ந்து சரிந்தால், பெட்ரோலியத்தில் கடுமையான தாக்கம் ஏற்படக்கூடும் என்றும், அதற்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.




