கிழக்கிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி! வரலாற்று நினைவுகளை மீட்டெடுத்த மக்கள்!!
மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு பாலத்தருகில் இறுதிப் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது.
இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் முற்றுகைக்குள் சிக்கி, உயிருக்குப் போராடிய மக்கள், உணவுத் தட்டுப்பாடு காரணமாகத் தங்களிடமிருந்த அரிசியை வைத்துக் கொண்டு, உப்புக்கூட இல்லாமல் கஞ்சி காய்ச்சிப் பசியாறினர்.
அந்தத் துயரார்ந்த நாள்களையும், மக்களின் தியாகத்தையும் நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தின் இக்காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு எங்கும் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பட்டிருப்பு பாலத்துக்கு அருகே திரண்ட பொதுமக்கள், அங்கு கஞ்சி காய்ச்சி, பாரம்பரிய முறைப்படி சிரட்டைகளில் வைத்து வீதியால் செல்வோருக்கும் பொதுமக்களுக்கும் வழங்கினர்.

அப்பகுதி பொதுமக்களால் சுயமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், மக்கள் பலர் கலந்துகொண்டு மிகுந்த உணர்வுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பெற்று அருந்தினர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





