அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று, யாழ். தீவகம் அல்லைப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு நாளும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.
தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத் தந்தையினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அல்லைப்பிட்டி சேமக்காலையில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில், உறவினர்களால் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
2006ஆம் ஆண்டு அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவுகளையும் இதன்போது உறவினர்கள் பகிர்ந்துகொண்டனர்.
இறுதி யுத்தத்தின்போது மக்கள் எதிர்கொண்ட சொல்லொணாத் துயரங்களையும், பட்டினியையும் நினைவுகூரும் வகையில், காய்ச்சப்பட்ட ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ சிரட்டைகளில் வழங்கப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கஞ்சியைப் பருகி, அந்த வரலாற்று அவலத்தைத் தமக்குள் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அல்லைப்பிட்டி படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தீவகம் நினைவேந்தல் குழுவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






