அறவழி எழுச்சியே மலையக மக்களுக்கு தீர்வை பெற்று தரும்!
மலையக மக்கள் மத்தியில் அறவழியில் எழும் எழுச்சியே அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்குரிய தீர்வை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் என்று கண்டி மாவட்ட காணி உரிமைக்கான தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
வெறும் அரசியல் மேடைப் பேச்சுகளுடன் நின்றுவிடாமல், காணி உரிமைக்கான ஒரு தெளிவான தீர்வு பொறிமுறையை (Solution Mechanism) மக்கள் மயப்படுத்த வேண்டிய தருணம் இதுவென அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
” காணி உரிமை பற்றிய கருத்தாடல் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் இன்னும் எத்தனை வருடங்கள் பேசிக் கொண்டிருக்கப்போகின்றோம்.
எனவே, தீர்வு பொறிமுறையொன்றை மக்கள் மயப்படுத்தி அது பற்றி பேசி, தீர்வை பெறுவதற்கு முற்படவேண்டிய காலமே இது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்திலுள்ள மலையக பிரதிநிதிகள், ட்ரென்ட் அரசியல் பற்றி பேசி, அதை சார்ந்த அரசியலை முன்னெடுப்பதைவிடுத்து மலையக மக்களுக்கான அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைப் பற்றிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
இதற்குரிய அழுத்தங்களை மலையக இளைஞர்கள், சிவில் அமைப்புகள் பிரயோகிக்க வேண்டும்.
ஜனநாயக ரீதியான அறவழி எழுச்சி ஒன்றின் மூலமே மலையக மக்களின் எதிர்காலச் சந்ததியினருக்கு முறையான காணி உரிமையையும், கௌரவமான வாழ்வையும் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மக்களின் இந்த எழுச்சியே மூடியிருக்கும் விடுதலையின் கதவுகளைத் திறக்கும் சாவியாக அமையும் என வேலுகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





