கைது உத்தரவு: SriLankan Airlines முன்னாள் CEO சடலமாக மீட்பு!
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள வீட்டில் வைத்தே இன்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலில், சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த 05 ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி இருந்தது.
5 லட்சம் ரூபா பெறுமதியான ரொக்க பிணையிலும், தலா 100 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலுமே அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், தலா 100 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளை வழங்குவதற்காக தலா 15 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டு வாடகைக்கு இருவர் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் பிணை நிபந்தனைகளையும், நீதிமன்ற நம்பிக்கையையும் மீறியதால் அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை ஒன்றையும் பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதிவான் கைது உத்தரவை நேற்று பிறப்பித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளாரா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.




